Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.9 திருஅங்கமாலை

திருநாவுக்கரசர்

4.9

திருஅங்கமாலை பண் - சாதாரி

82

தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.

83

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.

84

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ.

85

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்.

86

வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.

87

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.

88

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்.

89

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் வாக்கை யாற்பயனென்.

90

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்.

91

உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றார் ஆருளரோ.

92

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ.

93

தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.