திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ் சுற்றாய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு உற்றான் உமையவட் கன்பன் திருப்பா திரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங் கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம் புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர் உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.
மாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கே நேயம் நிலாவ இருந்தா னவன்றன் திருவடிக்கே தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பா திரிப்புலியூர் மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே.
வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர் அத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
எண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய் திண்ணார் அசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க் கண்ணார் நுதலாய் கழல்நங் கருத்தில் உடையனவே.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.
மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோ ந் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.