திருவையாறு - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன் பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன் முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித் தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.
பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி போக ஆனையின் ஈருரி போர்த்தவர் கோக மாலை குலாயதோர் கொன்றையும் ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே.
நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான் துஞ்சும் போழ்துநின் நாமத் திருவெழுத் தஞ்சுந் தோன்ற அருளும்ஐ யாறரே.
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில் அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார் பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர் அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே.
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர் அரிய பாடலர் ஆடல ரன்றியுங் கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம் அரியர் தொண்டர்க் கெளியர்ஐ யாறரே.
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர் மலரும் போதுக ளாற்பணி யச்சிலர் இலரும் போதும் இலாதது மன்றியும் அலரும் போதும் அணியும்ஐ யாறரே.
பங்க மாலைக் குழலியோர் பால்நிறக் கங்கை மாலையர் காதன்மை செய்தவர் மங்கை மாலை மதியமுங் கண்ணியும் அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே.
முன்னை யாறு முயன்றெழு வீரெலாம் பின்னை யாறு பிரியெனும் பேதைகாள் மன்னை யாறு மருவிய மாதவன் தன்னை யாறு தொழத்தவ மாகுமே.
ஆனை யாறென ஆடுகின் றான்முடி வானை யாறு வளாயது காண்மினோ நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள் தேனை யாறு திறந்தாலே யொக்குமே.
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன் அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென் றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே அரக்கி னானடி யாலும்ஐ யாறனே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.