திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.54 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்ட லரிடு வார்வினை மாயுமாற் கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ ரட்ட னாரடி சேரு மவருக்கே.
நீள மாநினைந் தெண்மலர் இட்டவர் கோள வல்வினை யுங்குறை விப்பரால் வாள மாலிழி யுங்கெடி லக்கரை வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே.
கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண் டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார் தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன் தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர் மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை வேன லானை யுரித்தவீ ரட்டரே.
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.
உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத் திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற் காலை யேத்த வினையைக் கழிப்பரால் ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற் பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.
அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண் டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந் தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ ரட்ட னாரடி சேரு மவர்களே.