திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.86 திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
கால பாசம் பிடித்தெழு தூதுவர் பால கர்விருத் தர்பழை யாரெனார் ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்த போது பயனிலை பாவிகாள் அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.
வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் உந்தி யோடி நரகத் திடாமுனம் அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார் சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.
கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற் தேற்றம் வந்து தெளிவுற லாகுமே ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால் ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.
மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர் வேறு வேறு படுப்பதன் முன்னமே ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க் கூறி யூறி உருகுமென் னுள்ளமே.
கான மோடிக் கடிதெழு தூதுவர் தான மோடு தலைபிடி யாமுனம் ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார் ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.
பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர் கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார் கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.
நாடி வந்து நமன்தமர் நல்லிருள் கூடி வந்து குமைப்பதன் முன்னமே ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.
கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க் கிட்ட மாகி யிணையடி யேத்துமே.
இரக்க முன்னறி யாதெழு தூதுவர் பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார் கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - இரத்தினகிரீசுவரர், தேவியார் - சுரும்பார்குழலம்மை.