திருக்கூடலையாற்றூர் பண் - புறநீர்மை
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.85 திருக்கூடலையாற்றூர் பண் - புறநீர்மை
சுந்தரமூர்த்தி நாயனார்
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும் பையர விளவல்குற் பாவையொ டும்முடனே கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில் ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில் ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன் பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.
வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற் சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங் கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில் ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல் இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங் குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில் அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும் பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக் குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில் அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப் பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில் ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும் ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற் பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர், தேவியார் - புரிகுழலாளம்மை. இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.