Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர் பண் - சீகாமரம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.86

திருவன்பார்த்தான்பனங்காட்டூர் பண் - சீகாமரம்

872

விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.

873

அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப் பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார் பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர் உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே.

874

தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக் கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள் பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப் பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.

875

நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக் குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப் பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப் பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே.

876

உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச் சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை வரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே.

877

எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன் வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான் மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே.

878

மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன் கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான் பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர் ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே.

879

வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப் பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே.

880

மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம் உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப் பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே.

881

பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச் சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல் ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.