திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
திருநாவுக்கரசர்
முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக் கண்கண இருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப் பின்பக லுணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.
கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சி நிறைப்பெருங் கடலைக் கண்டேன் நீள்வரை யுச்சி கண்டேன் பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா இவைய னைத்தும் அறுப்பதோர் உபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னாரே.
நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள் ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார் ஆதனா னவனென் றெள்கி அதிகைவீ ரட்ட னேநின் பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.
சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப் படலைசேர் அலங்கல் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின் மடலைநீர் கிழிய வோடி அதனிடை மணிகள் சிந்துங் கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.
மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாக இந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ் சிந்திர மாக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்து கந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத் தாரே. (*) இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன கின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே.