திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை
திருநாவுக்கரசர்
ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகி வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர் நானெனிற் றானே யென்னு ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் தேனும்இன் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
நொய்யவர் விழுமி யாரும் நூலினுள் நெறியைக் காட்டும் மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனும் இடிஞ்சில் தன்னில் நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச் செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள் ஒள்ளியர் ஊழி யூழி யுலகம தேத்த நின்ற பள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடுந் தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச் சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலுங் கூறுடை மெய்யர் போலுங் கோளர வரையர் போலும் நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச் சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே.
ஞாலமும் அறிய வேண்டின் நன்றென வாழ லுற்றீர் காலமுங் கழிய லான கள்ளத்தை ஒழிய கில்லீர் கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோத நீக்கில் சீலமும் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
புரிகாலே நேசஞ் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும் எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும் தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே.
காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும் நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார் பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச் சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்கள் ஏத்தும் பூவான மூன்றும் முந்நூற் றறுபது மாகும் எந்தை தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
அங்கங்க ளாறு நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து சங்கங்கள் பாட ஆடுஞ் சங்கரன் மலைஎ டுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றுஞ் செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.